Wednesday, 22 February 2017

Hydraulic fracking தமிழகத்திற்குள் வந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது. இனியும் அமைதியாகிருந்தால் நம்மூரிலேயே நாம் பிச்சைகாரர்களாகிவிடுவோம்.

Hydraulic fracking ! இது பற்றி அனைவருமே அறிந்துவைத்திருப்போம். 1980களில் மக்களிடம் தற்பொழுதைய அளவு  விழிப்புணர்வு இல்லாத காலம். திடீரென ஒரு நாள் ஒரு வாகனம் எங்களூருக்குள் வந்தது. அதில் பல அதிகாரிகள். ஏதேதோ கலந்து ஆலோசிக்கின்றனர். ஒரு சிலரின் விளைநிலங்களை சில மாதங்களுக்கு பிறகு எடுத்துக் கொள்கிறார்கள். உரிமையாளர்களுக்கு சொர்ப்ப பணம் தருகின்றனர். அடுத்த சில நாட்களில் சுமையுந்துகளில் கருங்கற்கள் , செம்மண் சரளைகள் குவிக்கப்பட்டன. கையகப்படுத்திய நிலங்களில் அவை நிறைக்கபட்டன. இராட்சத துளையிடும் இயந்திரங்கள் வந்தன. ஓரு சில மாதங்கள் தொடர்ந்து துளையிடுதல் நடக்கின்றது. அங்கே வேலை செய்வோர் அங்கேயே குளிர்பதன அறைகளுக்குள் தங்குகின்றனர். ஒரு நாள் திடீரென ஒரு குழாய் நடப்பட்டு அதன் மீது தீ எரிவிக்கபடுகிறது. காற்று , மழை, வெயில் எதிலும் அது அனைவதேயில்லை. பிறகு அங்கிருந்த யாரையும் காணவில்லை. எங்கே என தேடிய பொழுது, " வைப்பூர் பக்கம் போய்ட்டாங்க" என பதில் கிடைத்தது. ஒரு பத்தாண்டுகளில் , டெல்டா மாவட்டங்கள் மற்றும் கடலூர் மாவட்டத்தின் ஒரு சில பகுதிகளில் இதே போல பல இடங்கள் , விளைநிலங்கள்  காவு வாங்கப்பட்டன. கெயில் நிறுவனம் இயற்கை எரிவாயு எடுக்கின்றது என பிறகே தெரிய வருகிறது. இப்படி ஊருக்கு ஊர் இருக்கும் வாயு கிணறுகளை பலவற்றை குழாய்கள் மூலம் ஒன்றாக இணைக்கபட்டு, ஓர் இடத்தில் மீட்டரிங் பாய்ன்ட்கள் வைக்கப்பட்டன. அங்கே பல தொழிற்சாலைகள் திடுமென முளைத்தன.  விளை நிலங்கள் அடிமாட்டு விலைக்கு வாங்கப்பட்டன. விவசாய கூலிகளுக்கு அந்த தொழிற்சாலைகளில் எடுபிடி வேலைகள் தரப்பட்டன. நில உடைமையாளர்களுக்கு அந்த தனியார் நிறுவனங்கள் அவர்களின் நிலத்திற்கு மிக அதிக விலை தந்தனர். சில நிறுவனங்கள் ஓரிரு ஆண்டுகளில் காணாமல் போயின. நில உடைமைகாரனும் , அங்கே வேலை செய்தவனும் இப்பொழுது நடுத் தெருவில்! நாளாக நாளாக, குடி நீர் சுவை மாறுகிறது. ஏன் என கேட்க, பதில் சொல்ல அங்கே யாருமில்லை.

மேலே கடைசி சில வரிகளை நினைவில் கொள்க! பாசனத்திற்கு தண்ணீர் இல்லை என்றாலும், விவசாயம் ஒரு சில வருடங்கள் நடக்கவில்லை என்றாலும், நிலங்களின் சந்தை மதிப்பு வீழ்ந்துவிடும். அதை விற்று பிழைக்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவர். நாடெங்கிலும் நதிநீர் பங்கீடுகள் செவ்வனே சுமூக தீர்வு கண்டுகொண்டிருக்க, காவிரி நீர் பங்கீடு மட்டுமே தொடர்ந்து சர்ச்சைகளில் மாட்டி தவிக்கிறது. இப்பொழுது எங்கோ ஒரு தூரத்து வளையம் தென்படுகிறதா ! Hydraulic fracking தமிழகத்திற்குள் வந்து பல பத்தாண்டுகள் ஆகிவிட்டது. இனியும் அமைதியாகிருந்தால் நம்மூரிலேயே நாம் பிச்சைகாரர்களாகிவிடுவோம். இருப்பதையேனும் காத்திடுவோம். நாம் எதிர்க்க வேண்டியது மீத்தேன் நிறுவனங்களை மட்டுமல்ல. ONGC, GAIL, MECL ஆகியவற்றையும் சேர்த்துத்தான். ஒன்றினைவோம்.

No comments:

Post a Comment